Saturday, November 28, 2009

கணித விஞ்ஞானத்துறைகளில் தமிழ்மொழி மாணவர்கள் சாதனை

அண்மையில் வெளியாகிய க பொ த உயர்தரப்பரீட்சையில் தமிழ் மொழிமூல மாணவர்கள் சாதனை நிலை நாட்டியிருக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்வைத்தருகிறது.சாதனைகளின் வரலாற்றில் இந்த தமிழ் மொழிமூல மாணவர்களும் தங்கள் பெயர்களை பொறித்திருக்கிறார்கள்.நாட்டில் காணப்பட்ட அசாதாரண சூழலிலும் கூட இவர்கள்சாதனைகளை நிலை நாட்டியிருப்பது மிகச்சிறப்பான விடயமே,

க.பொ.த சாதரண தர பரீட்சை மாணவர்களின் உயர்கல்விக்கான பாதையின் முக்கிய கட்டம் என்ற வகையில் இவர்களின் இந்த வெற்றி இவர்களை ஒரு சிறப்பான வழியில் சிறப்பான வாழ்க்கையை அமைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆம்
தமிழ்மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி மாணவி மைதிலி சிவபாதசுந்தரம் விஞ்ஞானத்துறையில் தமிழ்மொழிமுலம் மற்றும் அகில இலங்கையில் முதலாமிடம் பெற்றிருக்கிறார்.யாழ்ப்பாண மாவட்டத்தை தனது சொந்த இடமாக கொண்ட இவர் சைவ மங்கையர் கழகத்தை தன் கல்விக்காக தெரிவு செய்து கல்வியைப்பயின்றவர், தனது இந்த பெறுபேற்றில் பாடசாலையின் பங்களிப்பைக்கூட அவர் நினைவுபடுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்,” உயர்தரத்தைப்பொறுத்தமட்டில் கற்கும் பாடசாலை,மற்றும் படிக்கும் பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் ஆகியவற்ற்றின் பங்களிப்புத்தான் தன் இந்த பெறுபேறுக்கான முக்கிய காரணமாக அமைந்தது என்று பாடசாலையில் பெருமை கொள்கிறார் மைதிலி,அத்தோடு தன் இரண்டு வருட கால உயர்தர கல்வி வாழ்க்கையில் ”இன்னொரு நாள்” என்ற ஒரு சொல் இருந்ததே இல்லை என்றும் அன்றன்றே கவனம் எடுத்து படித்தமையே என்னை இப்படியாக வெற்றிகொள்ளசெய்திருகிறது என்று தன் வெற்றிக்கான வழியை பகிர்ந்துகொள்கிறார் மைதிலி.
பாடசாலை அதிபர் திருமதி கஜேந்திரதாஸ்,கல்லூரி மற்றும் பிரத்தியேக ஆசிர்யர்கள்,மற்றும் அம்மா அப்பா,அக்கா அண்ணா என்று தன் வெற்றிக்குப்பின்னால் நின்ற அனைவரையும் நினைகூர்ந்து நன்றி பகர்ந்துகொள்கிறார்.பாடசாலை அதிபர் அவர்கள் மைதிலியைப்பற்றிக்குறிப்பிடும்போது “ கல்வித்துறை மட்டுமல்லாமல் இந்த மாணவி கலைத்துறைகளான நடனம் சங்கீதம் மற்றும் நாடகங்கள் என்பன மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறைகள் போன்றவற்றிலும் தன் ஈடுபாட்டைதிறமையாக வெளிப்படுத்தியவர்” என்று பெருமை கூறுகிறார்.



அடுத்து
தமிழ் மொழிமூலம் பரீட்ச்சைக்குத்தோற்றிய ஹாட்லியின் புதல்வன் ஜோன் நிராஜ் கணிதத்துறையில் தமிழ் மொழி மூலம் முதலாவது இடத்தையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.யாழ்ப்பாண மாவட்டம் நெல்லியடியை தன் சொந்த இடமாகக்கொண்ட இவர் தன் இரண்டாம் நிலைக்கல்விக்காக ஹாட்லிக்கல்லூரியில் அனுமதி கிடைத்து கல்வி பயின்றவர்.சிறு வயதுமுதலே பொறியியலாளராக வரவேண்டும் என்ற கனவு தனக்கு இன்று கிட்டியிருப்பதாக மகிழ்ச்சிகொள்கிறார் ஜோன் நிராஜ்.அந்தக் கனவுடன் தன் இலட்சியம் நிறவேறுவதற்காக அதே இலக்குடன் கல்வி பயின்றதும் இலக்கு எதுவோ அதை எட்டியிருப்பதும் அளவிலா மகிழ்சியைத்தருகிறது என்று குறிப்பிடுகிறார்.பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் அதிபர், மற்றும் தனக்கு கல்வி புகட்டிய கல்லூரி ஆசிரியர்கள்,தனியார்கல்வி நிலைய ஆசிரியர்கள்,இவர்கள் எல்லாம் தன் கல்வியில் இருந்த ஈடுபாட்டுக்கான வழிகாட்டிகள் என்று நினைவூட்டுகிறார் ஜோன் நிராஜ்.அதுமட்டுமல்லாமல் தன் அன்பான அம்மா அப்பா பாசம் மிகுந்த அக்கா மற்றும் அத்தான் தன் கல்வியில் கிடைத்த ஊக்கிகள் என்று அன்புடன் பகிர்ந்துகொள்கிறார்.எந்த நிலையிலும் உன்னால் வெற்றி கொள்ள முடியும் என்று ஊக்குவித்துக்கொண்டே இருப்பார்களாம்.ஹாட்லியின் அதிபர் இந்த மாணவனைப்பற்றிக்குறிப்பிடும்போது ‘ஜோன் நிராஜ் கல்லூரிக்காலங்களில் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்னோடியான மாணவனாக என்றும் இருந்தார் என்றும் இவரின் கணிதப்புலமை மற்றவர்களை வியக்கும் படியாக அமைந்திருந்தது” என்றும் குறிபிடுகிறார்.அதுமட்டுமல்லாமல் அண்மையில் ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நாளில் இடம்பெற்ற இரத்ததானம் வழங்கும் சேவையில் ஜோன் நிராஜும் தன் பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பதையும் நினைவுபடுத்தினார்.இந்த நிகழ்வு அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் அதிகூடியளவு மாணவர்கள் இரத்த தானம் வழங்கியதாக சாதனையாகவும் பதியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.இப்படியாக சாதனைகளில் தன் பங்களிப்புக்களை ஈடுபடுத்தும் இந்த மாணவன் ஜோன் நிராஜ் ஹாட்லியின் வரலாற்றிலும் அகில இலங்கையிலும் தன் பெயரைப்பொறித்திருக்கிறார்.இப்படியாக கணிதத்துறையில் தமிழ்மொழி மாணவர்கள் பலகாலம் தொட்டே சாதனை படைபவர்கள் என்ற அடிப்படையில் ஹாட்லியின் ஜோன் நிராஜ் இந்த வருடம் அந்த சாதனையில் தன்பெயரைப்பொறித்திருக்கிறார்.


இப்படியாக தமிழ்மொழிமூல மாணவர்கள் இந்த வருடம் தங்கள் சாதனைகளை பொறித்திருப்பது சந்தோஷமளிக்கிறது.மைதிலி சிவபாத சுந்தரம் தன் உயர்கல்வியில் இருதய சத்திர சிகிச்சை நிபுணராக வரவேண்டுமென்றும் அதன் மூலம் தற்காலத்தில் மிகுந்த சேவை செய்ய முடியும் என்றும் தன் எதிர்காலத்தை வழிசெய்கிறார்.அதேபோல ஜோன் நிராஜ் "மிகச்சிறந்த கணனிப்பொறியியலாளனாக வரவேண்டுமென்பதே தன் இலட்சியமாகும்" என்று மனம் திடமாகச்சொல்கிறார்.

வெற்றிகளின் வளர்ச்சியில் இந்த மாணவர்களின் இலட்சியங்களும் வெற்றிபெற வேண்டும் என்று கரவைக்குரல் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறது.இன்றைய மகிழ்ச்சியான சாதனைவெற்றிக்களைப்போலவே அதனூடான இன்பத்தைப்போலவே என்றும் நீங்கள் சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக மிளிரவேண்டும் என்று கரவைக்குரல் வாழ்த்துகிறது.

Sunday, July 19, 2009

பக்திரச சொற்பொழிவாளர் பண்டிதர் சி.வேலாயுதம்

ஈழத்தின் சிறந்த சித்தாந்த பண்டிதர்கள் வரிசையில் சி.வேலாயுதம் அவர்களுக்கு சிறப்பான இடம் உண்டு
வடமராட்சியில் கரவெட்டியில் பிறந்து திக்கம் மற்றும் வதிரி கிராமங்களில் தொடர்ந்தும் வசித்துவரும் இவர் தமிழில் மிகவும் கைதேர்ந்தவர் ஆவார்.
இவர் ஆசிரியப்பணியில் இருந்த காலங்களில் அவர் தமிழ் மற்றும் தான் சார்ந்த சமயமாகிய சைவ சமயம் ஆகியவற்றைதெரிந்தெடுத்து மாணவர்களுக்கு கற்பித்தவர்.கற்பித்தவர் என்றுசொல்வதைவிட அவர் மாணவர்களுக்கு பயிற்றுவித்தவர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் கற்பிக்கும் போதெல்லாம் கற்பிக்கும் பாடம் மற்றும் கருத்து என்னவோ அதுவாகவே மாறிவிடுவாராம்.தமிழில் பாடல்களுக்கு பொருள் பொருளில் வரும் உவமானங்கள்,உவமேயங்கள் எல்லாம் பாடலை பாடிப்பாடியே மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் இவர் மாணவர்களின் அடிமனதில் எல்லாம் பதிந்துவிடச்செய்வதில் இவருக்கு நிகர் இவரே தான்...


இவர் ஆசிரியப்பணியில் இருந்து அதிபராகி ஓய்வு பெற்றவர்.அதிபரானாலும் ஆசிரியராக இருந்து விடுவதில் அளப்பெரிய சந்தோசமென்று அடிக்கடி சக ஆசிரியர்களோடு பகிர்ந்துகொள்பவர். அப்படியாக தமிழ் மற்றும் தன் சமயம் சைவ சமயத்தை மாணவர்களுக்கு ஊட்டுவதில் இவருக்கு தனியான ஈடுபாடு.ஊட்டுவதில் கொஞ்சம் கண்டிப்பானவரும் கூட
சித்தாந்த பண்டிதராகிய இவர் ஆலயக்கிரியகள் மற்றும் சைவ சமயம் சார்ந்த கிரியைகள் எல்லாம் அத்துப்படியாக அறிந்து வைத்திருப்பவர்.அறிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் உள்ளார்ந்த காரணங்கள் எவை எவை எல்லாம் எங்கு எங்கு செய்யக்கூடாது ஏன் செய்யக்கூடாது என்று எல்லாம் அவர் திறம்பட தெரிந்து வைத்திருப்பவர் தான் திரு,சி.வேலாயுதம் அவர்கள்.இவரின் தந்தை அவர்கள் புராணப்படிப்பில் மிகவும் சிறந்து விளங்கியதனாலோ என்னவோ புராணங்களுக்கு பொருள் சொல்லுவதிலும் சிறுபாரயத்திலிருந்தே தெரிந்து வைத்திருப்பதால் அவர் சிறப்பாக பொருள் சொல்லுபவர்.ஆலயத்தில் இவர் பொருள் கூறும்போது மக்கள் கண்கூட அங்கிங்கு பார்க்காமல் நேராகவே அவரை நோக்கியபடியிருக்கும்.
அதுமட்டுமில்லை இவர் ஒரு மக்கள் மனங்கவர்ந்த பேச்சாளரும் கூட.கம்பீரமான உச்சஸ்தாயியில் அமைந்த இவர் தொனியால் பாடிப்பாடியே சொற்பொழிவு ஆற்றுபவர். விநாயகர் மற்றும் முருக பக்தரான இவர் சொற்பொழிவில் அவர் தன் பிடித்த இறைவனைப்பற்றி சொல்லும் போது ஆனந்தகண்ணீர் விட்டுவிடுவார்.பத்தியில் ஒருகணம் அழுதுவிடுவார்.அப்போது ஏற்படும் குரலின் தழும்பலில் கேட்டுக்கொண்டிருந்த மக்களும் ஒருகணம் கண்ணைத்துடைத்துக்கொள்ளும்.அப்படியாக இவர் சொற்பொழிவுகளில் பக்திரசம் மேலிடும்.
இப்போதும் இந்தியாவில் முருகனின் ஆறுபடைவீடுகளுக்கும் சுற்றிவந்ததை பெருமையாக கொள்பவர்.இடையிடையே தன் சொற்பொழிவுகளின்போது அதை நினைவுபடுத்தும் இவர் ஆனந்தக்கண்ணீரால் அதில் பெற்ற சுகத்தை மக்களுக்கு பகிர்ந்துகொள்பவர்.

செல்வச்சந்நிதி ஆச்சிரம கலைக்கூடத்தில் இவர்கொஞ்சம் ஈடுபாடுமிக்கவர்.அங்கும் இவர் கம்பீரமான குரல் எப்போதும் சொற்பொழிவுகளினூடாக ஒலிக்ககேட்பதுண்டு.முருகனின் நாமத்தை தான் தாங்கிய இவர் கந்தபுராணத்தில் கைதேர்ந்தவர். செல்வச்சந்நிதி முருகனின் திருவிழாக்காலங்களில் இவர் முற்றுமுழுதாக அங்கே இவர் கூடிய காலம் தங்கியிருப்பது இவரின் முருகபக்திக்கு சான்று.இவரின் தமிழ், மற்றும் சைவசமயப்பணிகளை பாராட்டி கலைக்கூடம் அவரை கௌரவித்தமையும் இங்கு நினைவுகூரத்தக்கது

அடிக்கடி தன் குலத்தெய்வமாகிய விநாயகனையும் செல்வச்சந்நிதி முருகனையும் உச்சரித்தபடி வாழ்நாளை கழித்தபடி தமிழ் மற்றும் சைவசமயம் தழைத்தோங்க அறப்பணியாற்றி வாழ்ந்து வருபவர் பண்டிதர் சி.வேலாயுதம் அவர்கள்.

இப்படியாக ஆசிரியர்,அதிபர்,சித்தாந்த பண்டிதர்,மக்களின் நாடிபார்த்து சொற்பொழிவாற்றும் பக்திரசப்பேச்சாளர் என்று எல்லாம் புகழ்ந்து பேசவல்ல அறிஞர்,பண்டிதர் சி,வேலாயுதம் அவர்களை சிறியேன் கரவைக்குரல் வாழ்த்துவதில் பெருமையடைகிறது.

Wednesday, February 25, 2009

"காலத்தை வென்ற பொப்பிசைப்படல்கள் " ஈழத்தில் வந்த இன்னுமொரு சிறந்த படைப்பு




ஈழத்தின் படைப்புக்கள் வரிசையில் கடந்த இருபத்தியிரண்டாம் தேதி மாசி மாதம்
கான இசை இறுவட்டு ஒன்று வெளிவந்திருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது மீன் பாடும் தேனாடாம் மட்டுநகரில் வெளிவந்திருப்பது சிறப்பு.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கால்பதித்து அங்கெல்லாம் தமிழின் சிறப்பையும் நிகழ்வுகளையும் கொண்டு செல்லலும் ஊடகமாகிய இலங்கை தமிழோசை வானொலியின் படைப்பாக இசைப்பிரியர்களை அது அடைந்திருக்கிறது.
ஈழத்தின் மூத்த பாடகரும் பொப்பிசைத்திலகமுமாகிய எஸ்.ராமசந்திரன் அவர்கள் சிறப்பான குரலால் வெளிவந்திருப்பது இதற்கு எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
ஏனென்றால் எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் சிலகாலம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்,ஈழத்திலிருந்து உலகிற்கு பொப்பிசையை கொண்டுசென்றது மட்டுமல்லாமல் தன் சிறப்பான கம்பீரமான குரலால் பெருமளவு ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் பாடகர் அவர்களே தமிழில் பொப்பிசையை அறிமுகப்படுத்தியவர் என்பதும் நினைவூட்ட வேண்டிய விடயம்.
ஆகவே அவரின் குரலால் நீண்டநாட்களுக்கு பிறகு வந்த வெளியீட்டு என்ற அடிப்படையில் அதன் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை.
அந்த வகையில் இதன் வருகை சிறப்பானதே.
உலகின் பல்வேறு நாடுகளும் சென்று வந்த பெருமையும் பொப்பிசைத்திலகம் அவர்களுக்கு உண்டு.சென்று வந்த இடம் எல்லாம் ரசிகர்களையும் கவர்ந்து விட தவற இல்லை.அப்படி உலகம்பேசும் பாடகர் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களுக்காக வந்திருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது
இதை முற்று முழுதாக இலங்கை தமிழோசை வானொலிதான் [படைத்திருக்கிறது.
தென்னிந்திய மோகமும் ஈழத்தின் படைப்புக்களை ஆதரவு வழங்காத நிலைமைகளும் இருக்கும் இந்த காலகட்டத்தில் ஈழத்தின் படைப்பாக வெளியிட்டிருப்பது இதன் சிறப்பை உணர்த்துகிறது.இதற்கு ஊடகத்தின் துணிச்சல் படைப்பு,மகுடப்படைப்பு என்று தான் இதற்க்கு புகழாரம் சூட்ட வேண்டும்.
தலை நகரில் இருந்து ஈழத்தின் கீழக்கரை மட்டுநகருக்கு விரைந்து சென்று அங்கு வெளியிட்டிருப்பதும் போற்றுதட் குரியதே.ஈழத்தின் தமிழ் பேசும் நல்லுலகம் சென்று அங்கு வெளியிட்டிருப்பதும் முற்றிலும் வியாபார நோக்கமற்ற சிந்தையைக்கொண்டு வெளியிட்டிருப்பதும்தான் இதன் சிறப்பம்சம்.அத்துடன் பொப்பிசைப்பாடல்கள் என்பது பாமர மக்களும் புரிந்து கொள்ளும் கவி நடை மட்டுமல்லாது அந்த மனிதர்களின் உணர்வுகளையும் செயற்பாடுகளையும் நேரடியாகவே எடுத்துக்கூறுவதால் இலங்கை தமிழோசை வானொலி இதை இனங்கண்டு வெளியிட்டிருப்பது பாராட்டக்கூடியதே.அத்தோடு மட்டுமல்லாமல் உலகப் புகழ் பெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கியிருப்பது இதற்கு மிகையூட்டியிருக்கிறது.
முற்று முழுதாக இந்த இலங்கை தமிழோசை வானொலியின் படைப்பு ஈழத்தின் சிறந்த படைப்புக்களில் ஒன்றாக வந்திருக்கின்றது என்றால் மிகையில்லை.
இதை படைத்த படைப்பாளர் குழுக்கே இந்த புகழ் சேரும்
அத்தோடு இலங்கை தமிழோசை வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளர் இப்படியான படைப்புக்களுக்கு முன்னுரிமை அளிப்பது வானொலிக்கும் ஈழத்துக்கும் பெருமையான விடயமே.
இப்படியான படைப்பை நானும் இசையின் ரசிகன் என்ற அடிப்படையில் என்னைப்போன்ற ரசிகர்களுக்கு தந்த இலங்கைத்தமிழோசை வானொலியின் முகாமைத்துவப்பணிப்பாளர் A.M.ஜசீம் அவர்களுக்கும் பொப்பிசைத்திலகம் எஸ்.ராமச்சந்திரன் அவர்களுக்கும் தொகுத்தளித்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கும் கரவைக் குரலின் வலைப்பூ வாழ்த்துவதோடு இன்னும் பெரிய பெரிய படைப்புக்களை ஈழத்தில் இருந்து தர வேண்டும் என்று வாழ்த்துவதோடு அவர்களோடு இணைந்த இலங்கை தமிழோசை வானொலியின் படைப்பாளர் குழுவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறது

Saturday, September 20, 2008

முதலிடம் பெற்ற மாணவன் பாசுபதன் எல்லோருக்கும் முன்னுதாரணம்

ஆரம்பகல்வியே ஒரு மாணவனுக்கு அடிப்படைஎன்றும் அதுவே மாணவனை முன்னேற்றகரமான பாதைக்கு வழிகாட்டும் என்று ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை வாழ்த்தும்போது பார்த்தோம்.அதைகூறி ஒரு சில நாள்களில் ஐந்தாம் தர புலமை பரீட்சை முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.
இதில் எமது ஈழத்து மாணவன்,மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் இலங்கை தமிழ்மொழி மூல மாணவர்களில் முதலாம் இடத்தை பெற்றுக்கின்றார்.
எழுது மட்டுவாள்,மருதங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்த மாணவன்.ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவன் இந்த இடத்தை பெற்றிருப்பது எல்லோரும் பாராட்டப்பட வேண்டிய அம்சமே.
பிரபலாமான பாடசாலைகளுக்கே முதலிடங்கள் சொந்தம் என்ற வழக்கத்தை மாற்றியிருக்கிறார் மாணவன் பாசுபதன்.
அது மட்டுமல்லாமல் தனது இந்த வெற்றிக்கு காரணகர்த்தாக்களாக இருந்ததாகக் தனது முதற் தெய்வங்களாகிய பெற்றோர் ஆசிரியர்களை குறிப்பிட்டிருப்பதோடு அவர்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்
அதேபோல தனை வழிகாட்டிய பாடசாலைக்கும் நன்றியுடையவனாக் இருப்பேனென்று உறுதிபடக்கூறியுருக்கிறார்.
எல்லோரும் பிரபலமான பாடசாலைகளை நோக்கி படையெடுக்கும் இந்த தருணத்தில் தான் தன்னை வளர்த்த பாடசாலையிலேயே தொடர்ந்தும் கல்விகற்று அதற்கு புகழ் சேர்க்கப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
நிச்சயமாக தர்மலிங்கம் பாசுபதன் சிறந்த எண்ணங்களோடு தனது கருத்துக்களை குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் பெற்ற இந்த வெற்றியால் தனது கல்விக்கு,பெற்றோருக்கு,
பாடசாலைக்கு,கிராமத்துக்கு,ஈழத்துக்கு பெருமை தேடித்தந்திருக்கிறார்.
அவரின் கல்வி எப்போதும் சிறக்கவும் எப்போதும் அவர் எம் பிரதேசத்துக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்று எல்லோருக்கு பொதுவான இறைவனின் நல்லாசிகள் கிட்ட வேண்டுமென கரவைக்குரலின் வலைப்பூ வாழ்த்துவதோடு அவரோடு இணைந்து எம் ஈழத்தில் சித்தியடைந்த அனைவரையும் வாழ்த்துகின்றது

Thursday, September 18, 2008

வாருங்கள் வணக்கம்

வானம்பாடி இணைய தளத்துக்கு உங்களையும் வரவேற்கின்றோம்
இது முற்றிலும் ஈழத்தில் பிறந்து பல்வேறு திறமைகளோடு பிரகாசித்து எம் விழுமியங்களை பாதுகாத்து வளர்க்கும் எம் சொந்தங்களை வாழ்த்துவதற்காக வருகிறது.
உங்கள் ஆதரவோடு இந்த வானம்பாடி வலைப்பூ மலர்ந்து நறுமணம் பரப்பி வரும். நன்றி